29

சென்னையில் பிறந்து, சில காலம் அங்கேயே வளர்ந்து பிரிட்டன் சென்று அங்கே குடியுரிமை பெற்று, பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குத் தலைவராக சில காலம் இருந்து விளையாடிய நாசெர் ஹுசைன் தனது 36வது வயதில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

நாசெர் ஹுசைன்96 டெஸ்டு போட்டிகளில் விளையாடிய ஹுசைன் 5,764 ஓட்டங்களை சராசரி 37.18 என்ற கணக்கில் எடுத்திருந்தார். அதில் 14 சதங்களும், 33 அரை சதங்களும் அடங்கும். தான் விளையாடிய கடைசி இன்னிங்ஸில் நியு ஜிலாந்துக்கு எதிராக சதம் அடித்து இங்கிலாந்தை ஜெயிக்க வைத்தார். அவரை அணியிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவுமில்லை. பின் ஏன் ஓய்வு பெற்றார்? தற்போதைய அணித்தலைவர் மைக்கேல் வான் போன டெஸ்டில் விளையாடவில்லை. அதனால் தற்காலிகமாக விளையாட உள்ளே வந்த ஆண்டிரூ ஸ்டிராஸ் என்பவர் தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடிக்க, இங்கிலாந்து அணித்தேர்வாளர்களுக்கு குழப்பம் வந்தது. அடுத்த டெஸ்டு போட்டியில் வாக்ன் திரும்பி விடுவார். அதற்காக ஸ்டிராஸை வெளியேற்றுவதா? இங்கிலாந்து அணியில் ஆகாஷ் சோப்ரா போன்ற பலியாடும் தற்போது இல்லை. [ஞாபகம் வருதா? பாகிஸ்தானில் கங்குலி விளையாட முடியாதபோது யுவ்ராஜ் சிங் உள்ளே வந்து சதம் அடித்தார். மூன்றாவது டெஸ்டில் கங்குலி மீண்டும் வர, யுவ்ராஜையும் வெளியே தள்ள முடியாத நிலையில் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வெளியேற்றப்பட்டார்.] இதற்கிடையில் ஹுசைன் தனக்கு வயதாகிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். மேலும் பல இளம் ஆட்டக்காரர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார். [அதற்குமேல், ஸ்கை டிவியில் ஆட்ட வர்ணனையாளர் வேலையும் அவருக்குக் காத்திருந்தது.] எனவே தான் மேலே இருக்கும்போதே ஆட்டத்தை விட்டு விலகிவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஹுசைன் 88 ஆட்டங்களில் விளையாடி 2,332 ஓட்டங்களை 30.28 என்ற சராசரியில் எடுத்திருந்தார். அதில் ஒரு சதமும், 16 அரை சதங்களு அடக்கம். இந்த ஒரு சதம் இந்தியாவிற்கு எதிராக நாட்வெஸ்ட் கோப்பை இறுதியாட்டத்தில் எடுத்தது. அச்சமயத்தில் இங்கிலாந்து பத்திரிகையாளர்கள் ஹுசைன் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலக வேண்டும் என்று எழுதிக்கொண்டிருந்தனர். அதற்கு சாதகமாக ஹுசைன் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை என்றும் அவரது ஸ்டிரைக் ரேட் – ஓட்டங்கள் எடுக்கும் வேகம் – மிகக்குறைவாக உள்ளது என்றும் எழுதினர். அந்த ஆட்டத்தில், பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த ஹுசைன், பார்க்க சகிக்காமல் விளையாடினார். ஆனால் அதிர்ஷ்டம் அவர் பக்கமிருந்தது. அவர் அவுட்டாகக் கூடிய பல வாய்ப்புகள் இந்தியர்களிடமிருந்து நழுவியது. கடைசியாக சதம் அடித்தபின் ஹுசைன் பத்திரிகையாளர்கள் உட்கார்ந்திருத்த திசையை நோக்கி குனிந்து தன் முதுகைக் காட்டி, தன் கோபத்தை வெளியிட்டார். ஹுசைன் ‘3’ என்ற எண்ணுள்ள சட்டையை அணிந்திருந்தார். தான் சதம் அடித்ததன் மூலம், பேட்டிங் வரிசையில் ‘3’வது இடத்துக்குத் தகுதியானவர்தான் என்று சாதித்தி விட்டதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் குறிப்பிட்ட விதத்தில் எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. 2003 உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்தியும் விட்டார்.

உலகக்கோப்பைக்குப் பின்னரும் டெஸ்டு போட்டிகளில் தொடர்ந்து அணித்தலைவராக இருந்து வந்தார். ஜூலை 2003இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டு போட்டித்தொடரில் முதல் டெஸ்டுக்குப் பிறகு, பலத்த எதிர்ப்பிருந்ததால் தன் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அணியில் விளையாடினாலும், அவரது இடம் போய்விடுமோ என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் அவ்வப்போது சில ஓட்டங்களைப் பெற்று இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார் – போன வாரம் வரை.

ஹுசைன் 45 டெஸ்டு போட்டிகளில் அணித்தலைவராக இருந்துள்ளார். அதில் 17 டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளார், 15 தோல்விகள், 13 டிரா. 56 ஒருநாள் போட்டிகளில் அணித்தலைவராக இருந்ததில், 28 வெற்றிகள், 27 தோல்விகள், 1 ஆட்டம் முழுமையாக முடிவடையவில்லை.

ஹுசைன் பேட்டிங் கிட்டத்தட்ட ஸ்டீவ் வா பேட்டிங்கைப் போன்றது. அதில் கவிதையக் காண்பது கடினம். ஆனால் அவ்வப்போது பளீரென்று மின்னும் மின்னலைப் போல ஒரு கவர் டிரைவும், ஆன் திசையில் ஆடும் அடியும் இருக்கும். ஸ்டீவ் வா போலவே கடினமான நேரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி பந்தை எப்படியாவது தடுத்து நிறுத்துவதில் வல்லவர். அவரது விக்கெட்டைப் பெற அதிக முயற்சி தேவையாக இருந்தது. ஸ்டீவ் வா போன்றே, அனால் அவரை விட வலு குறைவான அணியை வைத்துக் கொண்டு சில சாதனைகளைப் புரிந்துள்ளார் ஹுசைன். பாகிஸ்தான் அணியை பாகிஸ்தானிலே தோற்கடித்தது, இலங்கை அணியை ஒரு டெஸ்டில் தோல்வியடைந்திருந்தும் அடுத்த இரண்டில் வென்று தொடரைக் கைப்பற்றியது, இந்தியாவில் கிட்டத்தட்ட இந்தியாவை தோற்கடிக்க வைத்தது (ஆனால் மழை இந்தியாவைக் காப்பாற்றியது), சற்றே தள்ளாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை இங்கிலாந்தில் தோற்கடித்தது என்று சில சாதனைகள். ஆஸ்திரேலியாவை மட்டும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முற்றிலும் சரணடையாமல் தொடர்களில் ஒரு டெஸ்டு போட்டியையாவது வெற்றி பெற்று வந்தார்.

உலகில் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும், சென்னையில் பிறந்து கிரிக்கெட் விளையாடியவர்களில் தலைசிறந்த ஆட்டக்காரர் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

O

அபிஜித் காலே லஞ்ச ஊழல் வழக்கில், காலே மீது முழுவதுமாக குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் காலே தான் அணித்தேர்வாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களை வற்புறுத்தியது உண்மை, ஆனால் லஞ்சம் கொடுக்க முற்படவில்லை என்று ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கோரி கடிதம் எழுதியுள்ளார். இதனால் அவருக்கு ஒரு வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் இன்னமும் ஏழு மாதங்கள் பாக்கி. அதனால் டிசம்பர் 2004 வரை அவர் விளையாட முடியாது.

O

ஹன்சி குரோன்யே மேட்ச்-பிக்ஸிங் விவகாரம் தொடர்கிறது. போனமுறை தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்தபோதுதான் இந்த விவகாரம் வெளியே வந்தது. அதில் ஈடுபட்டவர்கள் ஹெர்ஷெல் கிப்ஸ், மற்றும் நிக்கி போயே. இதில் ஹெர்ஷெல் கிப்ஸுக்கு ஒரு வருடத் தடையை தண்டனையாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வழங்கியிருந்தது. அதை முடித்து அவர் மீண்டும் விளையாட ஆரம்பித்து விட்டார்.

இப்பொழுது மீண்டும் தென்னாப்பிரிக்க அணி இந்தியா வரவிருக்கிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கிப்ஸ், போயே இருவரையும் இந்தியக் காவல்துறையினர் விசாரிக்கக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இந்த சலுகையை வழங்கும் உரிமை கிடையாது. காவல்துறையும் நிச்சயமாக கிப்ஸ், போயே இருவரையும் விசாரிப்போம் என்று சொல்கின்றனர். இதனால் இவ்விருவரும் இந்தியா வரப்போவதில்லை என்று சொல்கின்றனர்.

போனமுறை இந்தியாவுடன் விளையாடிய இரண்டு டெஸ்டு போட்டிகளில் போயேதான் ஹீரோ. ஒரு ஸ்பின்னர் கூட இந்தியாவைத் தோற்கடிக்க முடியும் என்று காண்பித்தார். இத்தனைக்கும் அவர் உலகத்தரம் வாய்ந்த ஒரு ஸ்பின்னர் கிடையாது. கிப்ஸ் மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரர். அவர் வராவிட்டால் அதனால் தென்னாப்பிரிக்க அணி பாதிப்படையும்.

 

 

—முற்றும்—

License

Share This Book