14

டெண்டுல்கர் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் இப்பொழுது விளையாடாமல் இருக்கிறார். அவர் கடைசியாக விளையாடியது ஆசியக் கோப்பை ஆட்டங்களில். தொடர்ந்து ஹாலந்தில் நடைபெற்ற விடியோகான் கோப்பையிலும், இங்கிலாந்தில் தற்போது நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையிலும் டெண்டுல்கரால் விளையாட முடியவில்லை.

டெண்டுல்கரின் முழங்கைக் காயத்திற்கு ‘டென்னிஸ் எல்போ’ என்று பெயர். மருத்துவ பாஷையில் Lateral Epicondylitis என்பார்கள். முழங்கை தசைகள் அதிகமான வேலை காரணமாக வீங்கியும், வலிதரக்கூடியதாகவும் உள்ளது. இந்த வலி இருக்கும்போதே டெண்டுல்கர் விடாமல் பயிற்சி செய்துள்ளார். அப்பொழுது அஜித் அகர்கார் வீசிய குறைந்த அளவுள்ள ஒரு பந்தினைத் தடுக்கும்போது முழங்கையில் ‘விர்ரென்று’ ஏறி விட்டது.

இப்பொழுது ஒலி அதிர்வலைகள் மூலம் இந்தக் காயத்தைக் குணமாக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெங்களூரில் நடக்கவிருக்கும் முதல் டெஸ்டில் டெண்டுல்கரால் விளையாட முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.

டெண்டுல்கருக்கு ஏற்கனவே முதுகெலும்பில் வலி; கூடவே கால் கட்டை விரலில் பிரச்னை. அத்துடன் இந்த முழங்கை வலியும் சேர்ந்தால் வெகுநாட்கள் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம் என்று தோன்றுகிறது.

தன் விளையாடும் காலத்தை நீட்டிக்க, டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகிவிடலாம் என்றும் தோன்றுகிறது. இதனால் தன் டெஸ்ட் வாழ்நாளை அவரால் அதிகப்படுத்திக் கொள்ள முடியும். டெஸ்ட் விளையாட, சற்று குறைந்த பிட்னெஸ் போதுமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் பந்து வீச வேண்டிய அவசியமில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளது போல வேகமாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டியதில்லை. பந்துத் தடுப்பாளராக மைதானமெங்கும் ஓடித் திண்டாட வேண்டியதில்லை.

இந்தியாவின் முக்கியமான மட்டையாளர்களில் ஒருவரான டெண்டுல்கரின் கிரிக்கெட் ஆயுளை நீட்டிக்க வேண்டியது இந்திய அணியின் பொறுப்பாகும். டெண்டுல்கரும் தன் 16 வயதிலிருந்து விடாது டெஸ்ட் விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டிகளிலிருந்து எடுக்கும் ஓய்வு அவருடைய குடும்பத்துக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருக்கும்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை – இதுவரை

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான விளையாட்டுகள் தொடங்கி முதல் கட்டமான ஒரு நல்ல அணியும், ஒரு மோசமான அணியும் எதிர்த்து விளையாடும் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன.

மொத்தம் நான்கு குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அணிகள்: இரண்டு நல்ல அணிகள், ஒரு ஒப்புக்குச் சப்பாணி. ஒப்புக்குச் சப்பாணிகளான அமெரிக்கா, பங்களாதேஷ், கென்யா, ஜிம்பாப்வே நால்வரும் தாம் ஒவ்வொருவரும் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியுற்று சமர்த்தாக வீடு திரும்பி விட்டனர். அடுத்து ஒவ்வொரு குழுவிலும் உள்ள இரண்டு நல்ல அணிகளுக்கிடையேயான மோதல் – இது சடன் டெத். தோல்வியுற்றவர் வீடு திரும்ப வேண்டும். இன்று ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ஆட்டம் நடைபெறுகிறது. பாதிக் கிணறு தாண்டிய நிலையில், ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும் போலத் தோன்றுகிறது.

நாளை இங்கிலாந்து – இலங்கை, மறுநாள் தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள், அதற்கடுத்து ஞாயிறு அன்று உலகமே எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான்.

தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கிடையே அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

சென்ற வாரத்தில் இறுதியாட்டத்துக்கு ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தான் தேர்வு பெறும் என எழுதியிருந்தேன். ஆனால் இப்பொழுது குழுக்களை கவனித்தால், ஒருவரோடு ஒருவர் மோதுவதாக இருந்தால் இவ்விருவரும் அரையிறுதி ஆட்டத்தில்தான் மோதவேண்டி வரும் என்று புரிகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியக் குழப்பங்கள்

மும்பை உயர் நீதிமன்றத்தில் தொலைக்காட்சி உரிமம் வழக்கு தொடர்கிறது. உயர் நீதிமன்றமும், வழக்கு முடியும்வரை ‘status quo’ தொடர வேண்டும், வேறு யாருக்கும் தொலைக்காட்சி உரிமத்தை விற்கக் கூடாது என்று சொல்லியுள்ளது. Status quo என்றால்? கடைசியாக தூரதர்ஷனிடம்தான் தொலைக்காட்சி உரிமம் இருந்தது. எனவே அது தொடரும்…

ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் அக்டோபர் 6 முதல் தொடங்குகின்றன.

இப்படியே சண்டை தொடர்ந்து நடந்தால் கடைசியாக ஒன்றுக்கும் உதவாத தொடர்கள் மட்டும்தான் வழக்கில் வென்றவருக்குப் போய்ச்சேரும். ஏனெனில் ஆஸ்திரேலியா தொடரின் மதிப்பு மிக மிக அதிகம்!

இதற்கிடையில் ஜக்மோகன் தால்மியாவிற்கு ஏகமனதாக Patron-in-chief என்னும் பட்டம் கொடுத்துகௌச்சானிக் கொம்பில் உட்கார வைத்து விட்டார்கள். மேலும் பேட்ரன்-இன்-சீஃப் தால்மியாவுக்கு கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை விட அதிக அதிகாரங்கள் தருவதற்காக கிரிக்கெட் வாரியத்தின் சட்ட விதிகளை அங்கும் இங்குமாகத் தட்டி மாற்றப்போவதாகவும் கேள்வி. இதை எதிர்த்து போபால் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் ஓர் ஆசாமி தடையுத்தரவு வாங்கினார். ஆனால் அந்த கோர்ட்டின் உத்தரவைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் சென்னையில் சிறப்புப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி தால்மியாவுக்கு பேட்ரன்-இன்-சீஃப் ‘பதவி’யை வழங்கினர். இந்த வழக்கும் சில நாள்கள் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

அப்படி தால்மியாவுக்கு பேட்ரன்-இன்-சீஃப் பதவி ஏன் தரவேண்டும் என்ற கேள்வியை யாருமே கேட்கவில்லை!

மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏதோ தில்லுமுல்லுகள் செய்கின்றன என்று மத்திய அரசுக்குத் தோன்றினால், அரசே கிரிக்கெட் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

கிரிக்கெட்டில் இருக்கும் பணத்தைப் பார்க்கும்போது, அரசே உள்ளே புகுந்து கிடைக்கும் பணத்தை ஒழுங்காக மற்ற விளையாட்டுகளுக்கும் செலவழித்தால் நாட்டில் கிரிக்கெட்டும் பிழைக்கும், பிற விளையாட்டுகளும் பிழைக்கும் என்று தோன்றுகிறது.

License

Share This Book