16

பாகிஸ்தானில் நன்றாக விளையாடி சரித்திரம் படைத்த இந்தியா இன்று ஜெயிக்க ஏன் தடுமாறுகிறது? இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதல் இந்திய கிரிக்கெட்டில் கோடி கோடியாகச் செலவு செய்யும் நிறுவனங்களின் மார்கெடிங் மேனேஜர்கள் வரை கேட்கும் கேள்வி இதுதான்.

பாகிஸ்தான் தொடருக்குப் பின் இந்தியா ஆசியக் கோப்பை விளையாட்டுகளில் மிகவும் தடுமாறியது. இந்தியா முழு பலத்தோடும், முனைப்போடும் விளையாடினால் நிச்சயமாக ஜெயிக்கும் என்றுதான் நான் நம்பினேன். தமிழோவியத்தில் இந்தியா ஜெயிக்கும் என்று நான் சொன்ன ஆருடம் பலிக்கவில்லை. பந்துவீச்சில் பாலாஜி தடுமாறினார். ஜாகீர் கான் முழுமையான உடல் கட்டுமானத்தில் இல்லை. மட்டையாளர்கள் யாரும் சேர்ந்தாற்போல் ஒட்டி விளையாடவில்லை.

ஹாலந்தில் நடைபெற்ற போட்டிகளை முழுவதுமாக மறந்து விடலாம். மழையால் பாதிக்கப்பட்ட அந்தத் தொடரின் ஒரே பலன், பாலாஜி தன் பந்துவீச்சை மீண்டும் பெற்றதுதான்.

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் விளையாட்டு தண்ணீரில் மூழ்கிய நீந்தத் தெரியாதவன் கையயும் காலையும் விலுக் விலுக்கென்று உதறிக்கொண்டேயிருந்தால் பிழைத்துக் கொண்டுவிடலாம் என்று இயங்கியதைப் போலிருந்தது. ஒவ்வொரு விக்கெட் விழுந்தபோதும் யாருக்கும் நின்று ஆடத் தோன்றவில்லை. திராவிட் கூட இந்த வலையில் வீழ்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நிதானமாக நின்று ஆடியிருந்தால் இந்தியா 220 ஓட்டங்களாவது எடுத்திருக்கலாம். அதனால் வெற்றி வாய்ப்பு ஓரளுவுக்கேனும் அதிகரித்திருக்கும்.

சேவாக் விக்கெட் இழந்ததைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் கங்குலி, திராவிட், லக்ஷ்மண் மூவரும் புது விளையாட்டு வீரர் வார்ஃப் கையில் தன் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவரில் கொடுத்தனர். தொடர்ந்து யுவ்ராஜ் சிங்கின் ரன் அவுட்.

Rohan Gavaskarஎனக்கு ரோஹன் கவாஸ்கரின் தரத்தில் எப்பொழுதும் சந்தேகமே. சர்வதேச அளவில் விளையாடக்கூடிய திறமை அவரிடம் இல்லை என்பது என் கருத்து.

இந்தத் தோல்வியைக் கண்டு அதிர்ந்து போக வேண்டியதில்லை. டெண்டுல்கர் விளையாடப்போவதில்லை என்பதைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை. இதே இந்திய அணியால் ஆஸ்திரேலியா தவிர மற்ற அணிகளை எளிதாக வெல்ல முடியும். [ஆஸ்திரேலியாவை கஷ்டப்பட்டு வெல்ல வேண்டும்.]

குற்றம் பேட்டிங் மீதுதான். கங்குலி தொடக்க ஆட்டத்தில் சற்றே கவனம் செலுத்தி கடைசிவரை நின்று விளையாட முயற்சி செய்ய வேண்டும். திராவிடும் அப்படியே செய்ய வேண்டும். மற்றவர்கள் அனைவரும் தம் விளையாட்டை அப்படியே தொடரலாம். ஓரிருவர் பெரும் இன்னிங்ஸ்களை அடித்தால் தானாகவே தன்னம்பிக்கை வளர்ந்துவிடும்.

O

தன்னம்பிக்கை பற்றிப் பேசும்போது இங்கிலாந்து அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றிக் கட்டாயம் பேச வேண்டும். அத்துடன் தென்னாப்பிரிக்காவிற்கு என்ன ஆனது என்பது பற்றியும் பேச வேண்டும்!

இங்கிலாந்து அணி இந்தக் கோடை கால ஆட்டங்களில் விளையாடிய ஏழு டெஸ்ட்களிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. இம்மாதிரியானதொரு விளையாட்டை முந்தைய நாட்களில் மேற்கிந்தியத் தீவுகளும், தற்போதைய ஆஸ்திரேலியா மட்டுமே செய்துள்ளனர். ஸ்டீவ் ஹார்மிசன், ஆண்டிரூ ஃபிளிண்டாஃப், ஆஷ்லி ஜைல்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக நன்கு பந்துவீசி வருகின்றனர். அவ்வப்போது மாத்தியூ ஹோகார்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் பக்க வாத்தியங்களை சரியாகவே வாசிக்கின்றனர்.

ஆண்டிரூ ஸ்டிரவுஸ் புதிதாக அணிக்கு வந்துள்ள நட்சத்திரம். நாசெர் ஹுசெய்ன் இடத்தை நிரப்ப வந்த இவர் பிரமாதமாக விளையாடுகிறார். ஆண்டிரூ ஃபிளிண்டாஃப் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் தன் முத்திரையைப் பதித்து இப்பொழுதைய உலகின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக விளங்குகிறார்.

இங்கிலாந்து மீண்டும் மேலுக்கு வருவது உலக கிரிக்கெட்டுக்கு நல்லது.

மேற்கிந்தியத் தீவுகள் இப்பொழுது மிகவும் கடினமான நிலையில் உள்ளது. பார்வையாளர்கள் குறைந்து போயுள்ளனர். கிரிக்கெட்டில் பணம் குறைவு. லாரா போன்ற அற்புதமான வீரர் இருக்கும்போதும் பெறும் வெற்றிகளும் குறைவு. புதிதாக அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக வரவில்லை.

ஆனால் தென்னாப்பிரிக்கா திடீரென்று ஒலிம்பிக்ஸ் போன இந்திய வீரர்கள் போலத் தடுமாறுவது ஏனென்று புரியவில்லை. அணியில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் தொடர்ச்சியாக இலங்கையிடம் ஐந்து ஆட்டங்களைத் தொலைத்து விட்டு, பயிற்சியாளரை மாற்ற வேண்டுமா என்பது பற்றி யோசிக்கின்றனர். பழைய கிரிக்கெட் வீரர்கள் வெளியே வந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிர்காலம் குறைவு, உடனடியாக புது ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும் என்றெல்லாம் பயமுறுத்துகின்றனர். இந்தத் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஒரு குறைவும் இல்லை. பவுலிங்கில் சிறிது வலு சேர்க்க வேண்டும். அவ்வளவே.

இலங்கை அணி மீண்டும் நன்றாக விளையாடுவதும் நல்லதற்கே. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் சற்றே தன் ஆட்டத்தை கெட்டிப்படுத்தினால், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

License

Share This Book